tamilnadu

img

வியட்நாமில் இருந்து டிவிகள் இறக்குமதி செய்ய தடை விதிக்க ஐசிஇஏ வலியுறுத்தல்

வியட்நாமில் இருந்து தொலைக்காட்சிப் பெட்டிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் அல்லது இறக்குமதி வரியை உயர்த்த வேண்டும் என்று இந்திய செல்லுலார் மற்றும் மின்சாதனப் பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் (ஐசிஇஏ) வலியுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக ஐசிஇஏ (ICEA - Indian Cellular and Electronic Association), மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வர்த்தக அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதப்பட்டுள்ளது. அதில், கடந்த ஓராண்டில் மட்டும் வியட்நாமில் இருந்து எல்இடி டிவிகள் இறக்குமதி செய்யப்படுவது 25 மடங்கு அதிகரித்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு 1,000 கோடி ரூபாய் அளவிற்கு ஜி.எஸ்.டி. இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது. 

மேலும், இந்தியாவில் டிவிகளின் உற்பத்தி தற்போது பெரிய அச்சுறுத்தலை கண்டுள்ளது. ஆனால் தற்போது, அதிக அளவிலான தொலைக்காட்சி பெட்டிகள் வியட்னாமில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. தொலைக்காட்சி பெட்டிகளின் மூலக்கூறுகளை தயாரித்து வந்த சாம்சங் ஆலையும் இந்தியாவில் இருந்து வியட்நாம் சென்றுவிட்டதால், 10,000க்கும் மேற்பட்டோர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலையை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எனவே வியட்நாமில் இருந்து தொலைக்காட்சி பெட்டிகளை இறக்குமதி செய்ய தடை விதிக்க வேண்டும் அல்லது இறக்குமதி வரியை அதிகரிக்க வேண்டும் என்று ஐசிஇஏ வலியுறுத்தியுள்ளது.